ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய பங்காற்றிய தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் மரணம்
பிரபல தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் சென்னையில் காலமானார்.
சென்னை: தமிழக தடயவியல் துறை முன்னாள் இயக்குநரும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய பங்காற்றியவருமான சந்திரகேகரன் நேற்று காலமானார். அவருக்கு வயது 83.
இந்தியாவில் முன்னணி தடய அறிவியல் நிபுணர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சந்திரசேகரன். தமிழக தடயவியல் துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர்.
தடயவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பலவற்றையும் உருவாக்கியுள்ளார். அத்துறையில் தனக்கு கிடைத்த அனுபவங்களை சந்திரகேசரன் புத்தகமாகவும் எழுதி வந்தார். தடயவியல் துறைக்கு அவர் செய்த சேவையை பாராட்டி பத்மவிபூஷண் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆட்டோ சங்கர் வழக்கு, லண்டன் சிலை திருட்டு வழக்கு மற்றும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தடய சேகரிப்பில் முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பணி ஓய்வுக்கு பின் சென்னை சின்னமலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தநிலையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு காவல் துறை உயர் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.