நினைவு நாளில் வீரப்பன் போட்டோவுடன் கட்-அவுட்.. முத்துலட்சுமி மீது போலீஸ் வழக்கு
தர்மபுரி: சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் 11வது நினைவு தினத்தையொட்டி, அவரது போட்டோவுடன் கட்-அவுட் வைத்த மனைவி முத்துலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சந்தன கடத்தல் வீரப்பன், தமிழக அதிரடிப் படை போலீசாரால் 11வருடங்களுக்கு முன்பு அக்டோபர் 18ம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்டார். வீரப்பனின் 11வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், அன்னதானம் நடத்த அனுமதி தருமாறு கொளத்தூர் காவல் நிலையத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோரிக்கைவிடுத்திருந்தார். இக்கோரிக்கையை போலீசார் ஏற்க மறுத்ததை தொடர்ந்து ஹைகோர்ட்டை அணுகினார் முத்துலட்சுமி.
முத்துலட்சுமி கோரிக்கையை ஏற்ற ஹைகோர்ட், அன்னதானம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று வீரப்பனின் 11வது நினைவுதினத்தை அவரது குடும்பத்தார் அனுசரித்தனர். வீரப்பன் நினைவிடத்துக்கு, குடும்பத்தாருடன் சென்று முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே வீரப்பன் போட்டோவுடன், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முத்துலட்சுமி கட்-அவுட்டுகள் வைக்க ஏற்பாடு செய்திருந்ததாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கொளத்தூர் போலீசார், முத்துலட்சுமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அன்னதானம் நடத்த மட்டுமே கோர்ட் அனுமதி கொடுத்த நிலையில், போலீஸ் அனுமதி தராமல், சட்டத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபருக்கு கட்-அவுட் வைத்தது தவறு என காவல்துறை கூறுகிறது.