திருங்குறுங்குடி நம்பி மலைக்கோயிலுக்கு செல்ல மீண்டும் தடை… பக்தர்கள் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள திருங்குறுங்குடி நம்பி கோயிலுக்குள் செல்லவும் இரவில் தங்கவும் வனத்துறையினர் கெடுபிடி செய்து வருகின்றனர். இதனால் அதிருப்தியில் உள்ள பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு
திருநெல்வேலி: மலைக் கோயிலான திருங்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதிப்பதால் அவர்களை கண்டித்து போராட பக்தர்கள் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திருங்குறுங்குடி நம்பி கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 11ம் தேதி கோயிலுக்கு வந்த பக்தர்களை இரவில் கோயிலில் தங்க கூடாது என வனத்துறையினர் கட்டாயப்படுத்தி பக்தர்களை வெளியேற்றினர். இதனால் கோயில் நடைகள் சாத்தப்பட்டு வழிபாடுகள், அன்னதானம் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக நாங்குநேரி தாசில்தார் ஆதி நாராயணன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. பக்தர்களை கெடுபிடி செய்ய கூடாது, இரவில் தங்க அனுமதிக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், வனத்துறை அதிகாரிகள் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தீர்மான நகலில் வனத்துறையினர் கையெழுத்திடாமல் சென்று விட்டதாக குறிப்பெழுதி தாசில்தார் கையெழுத்திட்டு சென்று விட்டார்.
இந்நிலையில், மாலையும் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அவர்களிடம் வனத்துறையினர் மீண்டும் கெடுபிடி செய்தனர். வாகனங்களை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தினர். நடந்து சென்றவர்களின் முகவரியை வனத்துறையினர் நோட்டில் பதிவு செய்தனர். திரும்பி வரும்போது நோட்டில் பக்தர்களிடமிருந்து கையெழுத்து பெற்றனர். கையெழுத்து போட மறுத்தால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று வனத்துறையினர் கெடுபிடி செய்தனர்.
வனத்துறை அதிகாரிகளின் இந்தக் கெடுபிடியை கண்டித்து வரும் 1ம் தேதி நம்பி கோயிலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த பக்தர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.