கூரையை உடைத்துக்கொண்டு.. வீட்டுக்குள் தொபுக்கென்று விழுந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த குன்னூர்!
குன்னுர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை 5 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். குன்னூர் பகுதியில் அண்மைகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காட்டெருமைகள் உணவுகளை தேடி பொதுமக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.
வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் குட்டியுடன் காட்டெருமை ஓன்று இரை தேடி சுற்றி திரிந்தது. அப்போது நிலை தடுமாறிய தாய் காட்டெருமை தன்ராஜ் என்பவரது வீட்டின் கூரையை உடைத்து திடீரென உள்ளே விழுந்தது. இதனால் வீட்டில் உள்ள உபயோகப் பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தன.
பரிதவித்த குட்டி
வீட்டின் உரிமையாளர் தன்ராஜ் நல்ல வேளையாக அந்த நேரம் வீட்டில் இல்லை. அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தார். கதவு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தாய் காட்டெருமை தவித்து கொண்டிருந்தது. இதேபோல் தாய் உள்ளே விழுந்து விட்டதால், அதனை தேடி குட்டி காட்டெருமையும் பரிதவித்தபடி அந்த வீட்டை சுற்றியபடி வந்தது.
போராடி மீட்டனர்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வன சரகர் சசிக்குமார் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் கதவை உடைத்து, சுமார் 5 மணி நேரம் போராடி காட்டெருமையை பத்திரமாக மீட்டனர்.
பீதியில் உறைந்த மக்கள்
பின்னர் குட்டி காட்டெருமையை தாயுடன் பத்திரமாக சேர்த்து வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டெருமை விழுந்ததால் சேதமடைந்த வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது வீட்டின் உள்ளேயே காட்டெருமை விழுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போய் இருக்கின்றனர்.