சிறுத்தையைக் வெட்டி கொன்றவர் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறை- விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
தற்காப்புக்காக சிறுத்தையைக் வெட்டிக் கொன்ற விவசாயி மீது வனத்துறையினர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தற்காப்புக்காக சிறுத்தையை வெட்டிக்கொன்ற விவசாயி மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே மகாராஜகடை கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. 62 வயதான அவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 8 கறவை மாடுகள் வளர்த்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு, தனது தோட்டத்தில் புகுந்து தன்னையும் மாடுகளையும் தாக்க முயன்ற போது, சுதாரித்த ராமமூர்த்தி தனது கையில் இருந்த அரிவாளால் சிறுத்தையை தாக்கியதில், சிறுத்தை உயிரிழந்தது.
இதுகுறித்து சிறுத்தையைக் கொன்ற வழக்கில் ராமமூர்த்தி மீது வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனை விவசாயிகள் சங்கத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், தற்காப்பு நடவடிக்கைகளுக்காகவே ராமமூர்த்தி சிறுத்தையைத் தாக்கி உள்ளார். கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இல்லை. அதனால், வனத்துறை அவர் மீது பதிந்துள்ள வழக்கைக் கைவிடவேண்டும்.
ஒவ்வோர் முறையும் வன விலங்குகளால் விவசாயிகளுக்கும், அவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. அதனைத் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.