கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் முகாமிட்டுள்ள யானைகள்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் யானைகள் முகாமிட்டு பீதியை கிளப்பி வருவதால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தற்போது கோடையின் உச்சக்கட்டத்தில் இருப்பதபால் வெயிலை சமாளிக்கவும், கோடை விடுமுறையை கொண்டாடவும், கத்திரி இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இங்கு வரும் அனைவரும் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியை தவறாமல் பார்த்து செல்வர். இந்த பேரிஜம் ஏரியானது, கொடைக்கானலிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரி. அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருக்கும்.
இந்த சூழ்நிலையில், அங்கு சில நாட்களாகவே யானைகள் நடமாடுவதாக வனத்துறைக்கு தெரியவந்தது. அத்துடன் யானைக்கூட்டம் அங்கேயே முகாமிட்டு வருவதையும் அறிந்த வனத்துறையினர் பேரிஜம் ஏரிக்கு செல்ல நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், யானைகளின் நடமாட்டம் குறைந்தவுடன் மீண்டும் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பேரிஜம் ஏரியை காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.