கோவிலுக்குள் நுழைந்து அபிஷேக பொருட்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்!
கோவை: கோவை மருதமலை அடிவாரம், தொண்டாமுத்தூர், ஓனாப்பாளையம், மங்கரை அடிவாரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்ததால் சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி கொண்டு வரப்பட்டது.
யானைகள் வழித்தடத்தில் கும்கி நிறுத்தி வைக்கப்பட்டது. கும்கி யானை உள்ளதை அறிந்த 21 காட்டுயானைகள் கூட்டத்தில் 13 யானைகள் ஒரு பிரிவாகவும், 4 யானைகள் மற்றொரு பிரிவாகவும் மற்றவை தனித்தனியாகவும் பிரிந்தன.
மாங்கரை அடிவாரத்தில் 8 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு தங்கவேல் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் சோள காட்டில் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின.
நேற்று மருதமலை யானைகள் வழித்தடத்தில் வன அதிகாரிகள் கும்கி யானை பாரியை உலாவ விட்டனர். பெரும்பாலும் காட்டுயானைகள் கும்கி இருப்பதை மோப்பத்தின் மூலமே அறிந்து தப்பி ஓடிவிடும்.
நேற்று நள்ளிரவு வீடுகள் மற்றும் கூரைகளை பிரிக்கும் ஒற்றை காட்டுயானை மற்றொரு வழியாக மருதமலை அடிவாரப்பகுதிக்கு வந்தது. அங்கு அபிஷேக பொருட்கள் வைத்திருந்த கடையை உடைத்தும் பிரித்தும் உள்ளிருந்த அபிஷேக பொருட்களை தின்றும் நாசப்படுத்தியது.
நுழைவாயில் வழியே மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் படிக்கட்டில் ஏறியது. 13 ஆவது மண்டபத்தில் இடும்பன் கோவில் உள்ளது. அங்கு தண்ணீர் வசதிக்காக மோட்டார் அறை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு வந்த ஒற்றை காட்டுயானை இரும்பு பைப்புகளை உடைத்து தண்ணீரை குடித்தது. பின்னர் மோட்டார் அறையின் கதவை தந்தத்தால் குத்தியது. இதில் இரும்பு கதவு உடைந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கார்ட் குமார் தலைமையிலான வன ஊழியர்கள், யானை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஒற்றை காட்டுயானையை விரட்டி விட்டனர்.
யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் மருதமலை கோவிலுக்கு வர அச்சத்தில் உள்ளனர். கும்கி யானை உதவியுடன் காட்டுயானைகளை ஆனைகட்டி மற்றும் மாங்கரை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது.