சதுரகிரி மலை பகுதியில் காட்டுத் தீ: பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிப்பு
சதுரகிரி மலை பகுதியில் காட்டுத் தீ பிடித்துள்ளதை அடுத்து அங்குள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
விருதுநகர்: சதுரகிரி மலை பகுதியில் காட்டுத் தீ பற்றியுள்ளதை அடுத்து அங்குள்ள கோயிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி மலை. இங்கு பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட காலங்களில் பொதுமக்கள் மலைக்கு சென்று அங்குள்ள சுந்தரமகாலிங்கதை தரிசனம் செய்வர்.
இந்நிலையில் நேற்றை தினம் பௌர்ணமி என்பதால் அங்கு அதிகளவில் மக்கள் குவிந்தனர். அப்போது மின்னல் தாக்கியதால் காட்டில் உள்ள மரங்கள் தீப்பற்றி எரிந்தன.
சதுரகிரி கோயில் அருகே உள்ள பீட் 5, 6 மலை பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தை அறிந்த வனத்துறையினர் அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த 350-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பீட் 5 -இல் ஏற்பட்ட தீயை அணைத்த நிலையில் 6- இல் ஏற்பட்ட தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். தீவிபத்தால் பக்தர்களை மலை பகுதிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை.
கடந்த மாதம் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.