மேகமலை வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்: பழங்குடியினருக்கு ஜாமீன் கிடைக்காததால் மீண்டும் சிறை!!
தேனி: மேகமலை வனத்துறை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பலியர் இனமக்கள் 6 பேருக்கு ஜாமீன் கிடைக்காததால் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.
தேனி மாவட்டம், வருசநாடு ஆதிவாசிகள் காலனியில் வசித்து வந்த பலியர் இன மக்கள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தேன், கிழங்கு உள்பட சில பொருட்களை எடுத்து வர சென்றனர்.
அப்பொழுது அந்த பலியர் இன பெண்களை சுருளிப்பட்டி அருகே வனத்துறையினர் தடுத்து சோதனை என்ற பெயரில் அவர்களுடைய ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடமலைக்குண்டைச் சேர்ந்த அய்யணன் (30) மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த செல்வம் (51), பாண்டீஸ்வரன் (32), ஜெயக்குமார் (35), சேகர் (35), சூர்யா (25) ஆகிய 6 பேர், கடந்த ஜூலை 17 ஆம் தேதி மேகமலை வனத்துறை அலுவலகம் மற்றும் பணியாளர் சுபாஸ் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி கடமலைக்குண்டு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக சட்டசபையில் தி.மு.க.வினர் குரல் கொடுத்ததின் பேரில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், திருமாவளவன் உள்பட அரசியல் கட்சியினர் பொய்வழக்கு போடப்பட்ட பலியர் இன மக்களை விடுதலை செய்யக் கோரி கடலைக்குண்டிலும், தேனியிலும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்படி இருந்தும் அவர்களை விடுதலை செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நீதிபதி முன், 6 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களை ஆக. 12 ஆம் தேதி ஆஜர் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் முன், அய்யணன் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, வழக்கு விசாரணைக்காக வரும் ஆக. 26 ஆம் தேதி ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் இந்த 6 பேரையும் மீண்டும் ஆஜர் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.