வாவ்.. 'ராசாத்தி' வாழ்க்கையில் இந்த நாளை மறக்க முடியாது! மாயாற்றில் ஒரு கலக்கல்!
மணப்பெண்ணுக்கு வனத்துறையினர் பரிசல் கொடுத்து உதவியுள்ளனர்.
Recommended Video
நீலகிரி: அடித்துக் கொண்டு போகும் வெள்ளத்திற்கு மத்தியில், பரிசலில் உயிரை பணயம் வைத்து ஒரு கல்யாண பெண்ணை கரை சேர்த்து அசத்தியுள்ளனர் மாப்பிள்ளை வீட்டார்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை கொட்டி வருவது தெரிந்த சங்கதிதான். இந்த மழையால், பில்லூர் அணை நிரம்பி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதும் அறிந்த விவரம்தான். அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மாயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த மாயாறுதான் கல்யாண வீட்டுக்காரர்களை பாடாய் படுத்தி எடுத்துவிட்டது.
முக்கியம் வாய்ந்த மாயாறு
பவானிசாகர் அணையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தெங்கு மரஹடா என்ற மலை கிராமம். இது நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்டது. இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், மாயாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். நீலகிரி மாவட்டத்திற்குட்ட கிராமம் என்றாலும் அருகில் இருப்பது சத்தியமங்கலம் நகரம்.
துண்டிக்கப்பட்ட சாலை
ஏதாவது ஒரு அவசர தேவைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்கூட, மாயாற்றை கடந்து சத்தியமங்கலத்திற்குதான் சென்று வரவேண்டும். அவ்வளவு முக்கியமானது இந்த மாயாறு. இப்போது வெளுத்து கட்டும் மழையால் மாயாற்றிலும் வெள்ளம்தான். கடந்த சில தினங்களாகவே ஓயாமல் வெள்ளநீர் ஓடிக் கொண்டே இருப்பதால், தெங்குமரஹடா கிராமத்திற்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு விட்டது.
பரிசல் இயக்கவும் தடை
இதனால் அந்த கிராமத்திலிருந்து யாரும் வெளியே வரமுடியவில்லை. வெளியிலிருந்தும் யாராலும் அந்த கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. எப்போதாவது இப்படி மாயாற்றில் வெள்ளம் வந்துவிட்டால் எல்லோரும் பரிசல்தான் உபயோகிப்பார்களாம். இப்போது பரிசல்கூட இந்த வெள்ளத்தில் செல்ல முடியவில்லை. வெள்ளநீரில் தாறுமாறாக சுழன்று போய் எங்கேயோ விழுந்துவிடுகிறது. அதனால் பரிசல் இயக்குவதற்கும், அந்த வழியில் வாகனங்களை இயக்குவதற்கும் வனத்துறை அனுமதி மறுத்து உள்ளது.
மிரட்டிய வெள்ளம்
தெங்குமரஹடா கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி. அவருக்கும் சிறுமுகையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் 2 மாசத்துக்கு முன்பு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. நாளை மறுநாள் ராசாத்திக்கு கல்யாணம். சிறுமுகையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மணப்பெண் வீட்டார் ராசாத்தியை அழைத்து வர சென்றனர். ஆனால் மாயாறு வெள்ளத்தை பார்த்ததும் மிரண்டு நின்று விட்டனர்.
பரிசலில் சென்றனர்
நிச்சயிக்கப்பட்ட ராசாத்தியை எப்படி தொடர்பு கொண்டு கல்யாணத்துக்கு அழைத்து செல்வது என தெரியாமல் திணறினர். எப்படியும் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும், அதற்கு ராசாத்தியை வெள்ளத்தை தாண்டி மீட்டு கொண்டு வர வேண்டும் என்று மணமகன் வீட்டார் களத்தில் இறங்கினர். வனத்துறையினரை நாடி உதவி கோரினர். அவர்களின் அனுமதியுடன், ஒரு பரிசல் ஓட்டுபவரை பிடித்தனர். பரிசல் ஓட்டுவதில் அவர் ஸ்பெஷலிஸ்ட்டாம். அவரை பிடித்து தெங்குமரஹாடா கிராமத்திலுள்ள ராசாத்தி வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
வாழ்த்துக்கள் மணமக்களே
இப்போது மணமகளையும் அவரது குடும்பத்தினரையும் அங்கிருந்து அதே பரிசலில் ஏற்றி மறு கரைக்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர், அங்கிருந்து பேருந்து மூலமாக சிறுமுகை சென்றனர். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எப்படியும் நடத்திவிட வேண்டும் என்ற மணமகனின் விருப்பத்தை சிறப்பு அனுமதி அளித்த வனத்துறைக்கு நன்றிகள். அதேபோல வரப்போகும் மருமகளுக்காக மணமகன் வீட்டார் எடுத்த விடாமுயற்சிக்கும் சீரிய பாராட்டுக்கள். நாளை மறுதினம் கல்யாணம் செய்துகொள்ள போகும் புதுமண தம்பதிக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்!