"ப்ளூடூத் பிட்டு".. "வசூல்ராஜா" ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் ஆகிறார்!
ஐஏஎஸ் தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய அரசு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை : சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பி அடித்ததற்காக சென்னையில் ஐ.பி.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை சென்ன எழும்பூர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் ஷபீர் கரீம் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி தேர்வு எழுதினார். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பயிற்சி உதவி கண்காணிப்பாளராக இருந்து வருகிறார்.
தேர்வு மையத்தில் இவரது வித்தியாசமான நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த கண்காணிப்பாளர், பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் நவீன ப்ளூடூத், செல்போன், கேமரா தொழில்நுட்ப உதவிகளுடன் நூதன முறையில் காப்பி அடித்தது தெரியவந்தது.
உடனடியாக கைது செய்யப்பட்ட ஷபீர் கரீம், அவருக்கு உதவிய அவரது மனைவி ஜோய்ஸ் ஜியா மற்றும் அவர்கள் நடத்தி வந்த கோச்சிங் மையத்தின் நிர்வாகி ராம்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் ஷபீர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அவர் பணியில் இருக்கும் மாநிலத்தின் பரிந்துரை தேவை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்யவும், துறை ரீதியான விசாரணை நடவடிக்கைகளுக்கும் பரிந்துரை செய்தும் தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.