லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி!
திருப்பத்தூர்: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்பு உடையவர்களின் வீடுகள், இடங்களிலும் சோதனை நடந்தது.
Recommended Video
வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை , திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
கே சி வீரமணி வீட்டுக்கு விரைந்து வந்த பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம்.. சரமாரி கேள்வி
கே.சி.வீரமணி
2016 முதல் 2021 காலகட்டத்தில் கே.சி.வீரமணி அவர் பெயரிலும் அவரது தாயார் மணியம்மாள் (80) பெயரிலும் சொத்துகள் வாங்கியுள்ளதாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அதிகம் என்ற அடிப்படையில் சொத்து சேர்த்துள்ளதாகவும் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்த அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
ஏராளமானவை பறிமுதல்
நேற்று காலை முதல் கே.சி.வீரமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் பல்வேறு இடங்களில் நடந்த சோதனை நிறைவடைந்தது. ''இந்த சோதனையில் ரூ.34,01,060 ரொக்க பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அன்னிய செலவாணி டாலர், ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம்(623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்குக்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.
அ.தி.மு.க கண்டனம்
மேலும். கே.சி.வீரமணி வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல்(தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான) குவித்து வைக்கப்பட்டு இருந்தது என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. முன்னதாக இந்த சோதனை தொடர்பாக கண்டனம் தெரிவித்த அதிமுகவின் ஓ.பி.எஸ் ஆகியோர் ''தி.மு.க அரசு வேண்டுமென்றே அ.தி.மு.க.வினரை பழிவாங்க நினைக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் வெற்றி பெறுவதற்காக சோதனை என்னும் பெயரில் நாடமாடுகின்றனர்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.
கே.சி.வீரமணி பேட்டி
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், 'தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன் முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை. தி.மு.க அரசு போடும் எந்தவிதமான வழக்குகளையும் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் மூலம் அனைத்து வழக்குக்ளையும் சந்திப்பேன்' என்று கே.சி.வீரமணி கூறியுள்ளார்.