திமுக தொண்டர்கள் என் பக்கம்தான்.. புதிய பரபரப்பைக் கிளப்பும் மு.க.அழகிரி
திமுக தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை: திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தென் மண்டல அமைப்பு செயலாளராக அசைக்க முடியாத இடத்தில் இருந்த மு.க.அழகிரி, திருமங்கலம் இடைத்தேர்தலுக்கென்று ஒரு தனி பார்முலாவையே உருவாக்கினார். இதனையடுத்து கட்சிக்குள் நெருக்கடி காரணமாக நீக்கப்பட்டதையடுத்து, அவர் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
ஆனாலும் திமுக தலைவர் கருணாநிதியையும் தயாளு அம்மாளையும் அவ்வப்போது சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். சில சமயங்களில் திமுக குறித்த தன்னுடைய கருத்துக்களையும் சொல்லி வருகிறார்.
இந்நிலையில் பாலமேடு அருகே தன் ஆதரவாளர் மதுரை வீரன் இல்லத் திருமண விழாவில் அழகிரி கலந்துகொண்டார். அங்கு மணமக்களை ஆசிர்வதித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, " நான் இங்கு வருவதற்காக வரவேற்பு, பேனர்கள், மாலை மரியாதைகள் செய்யும்போது பழைய நினைவெல்லாம் வருகிறது.
திமுகவில் இப்போது இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர். அவர்கள் கட்சிக்காக உழைக்காதவர்கள். ஆனால் திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார். ஆனால், செயல்படுகிற வீரர்கள் இங்குதான் உள்ளனர்."
இவ்வாறு அழகிரி பேசினார்.
மு.க.ஸ்டாலின் குறித்து அழகிரி இவ்வாறு பேசியிருப்பது கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.