தொடரும் திக் திக் பலிகள்... மாஜி தலைமை செயலாளர் ராமமோகனராவின் முன்னாள் கார் டிரைவர் பலி
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் மாஜி கார் டிரைவர் தாம்பரம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சென்னை: மாஜி தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் முன்னாள் கார் ஓட்டுநர் தாம்பரம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவிற்கு டிரைவராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் தாம்பரம் அருகே இன்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ரவிசந்திரனின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமமோகன ராவின் வீட்டில் சோதனை
மணல் மாபியா சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவின் பெயரை கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் , ஜெயலலிதா மறைந்த பிறகு, அண்ணா நகரில் உள்ள மோகனராவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அவரது மகன், சம்பந்தி என அனைவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. முடிவில் பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு அவர் பதவி பறிக்கப்பட்டது
விபத்தா? கொலையா?
ராம மோகன்ராவ் தற்போது மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் அவரது முன்னாள் கார் டிரைவர் இன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது விபத்தா? அல்லது கொலையா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
கொடநாடு கொலை
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கடந்த 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முதல் கட்டமாக 4 பேரை கைது செய்தனர்.
கனகராஜ் மரணம்
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக ஜெயலலிதாவின் முன்னாள் கார்ஓட்டுநர் கனகராஜ், சாயன் ஆகியோர் கருதப்பட்டனர். இதனால் தனிப்படை போலீஸார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் சேலம் அருகே நடந்த விபத்தில் கனகராஜ் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
மனைவி, மகன் பலி
மற்றொருவராரன சாயன், பாலக்காடு அருகே காரில் மனைவி, குழந்தையுடன் தப்பபி செல்ல முயன்ற போது டாங்கர் லாரி மோதி மனைவி, குழந்தை உயிரிழந்துவிட்டனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சாயன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏதோ மர்மம் இருப்பதாலும், உண்மை வெளிவருவதை தடுப்பதற்காகவும் இந்த இரு சம்பவங்கள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர்.
திக்...திக்... திகில்
ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் இறந்த பரபரப்பு அடங்குவதற்குள் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவின் மாஜி கார் ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். முக்கிய பிரமுகர்களின் கார் ஓட்டுநர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்து வரும் சம்பவம் மற்ற அரசியல்வாதிகளின் கார் ஓட்டுநர்கள் மத்தியில் திகிலடைய செய்துள்ளது.