சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு திரட்டிய ராம்நாத் கோவிந்த்! உற்சாக வரவேற்பு
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள ராம்நாத் கோவிந்த், ஓபிஎஸ் அணியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இன்று காலை சென்னை வந்த ராம்நாத் கோவிந்த், மாலையில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் ஓபிஎஸ் அணியினரை சந்தித்து ஆதரவு கோரினார்.
முன்னதாக, ராம்நாத் கோவிந்த் ரஷ்யன் கலாச்சார மையத்திற்கு வந்ததும் அவரை வாசலில் வந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் எம்.பிக்கள், மற்றும் எம்.எல்.ஏக்களிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு ராம் நாத் கோவிந்த் ஆதரவு திரட்டினார்.
முன்னதாக, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். அப்போது தமது கட்சி எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆதரவை ரங்கசாமி உறுதி செய்தார்.
ராம்நாத் கோவிந்த் தன்னிடம் ஆதரவு கோரியது ஜெயலலிதாவின் உண்மை தொண்டனான தனக்கு கிடைத்த மரியாதை என்றும், அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர முடிவு செய்துள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் தெரிவித்தார.