ஜெயந்தி நடராஜனின் மாமனார், முன்னாள் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் மரணம்
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் மாமனாருமான வி.கார்த்திகேயன் சென்னையில் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 90. அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1948-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்ற, வி.கார்த்திகேயன் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 35 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை தலைமைச் செயலாளராகவும், அதன்பிறகு சில மாதங்கள் ஆளுநரின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
1977-ஆம் ஆண்டு ஜூன் முதல் 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் தலைமைச் செயலாளராக மீண்டும் பணியாற்றினார். இதன்பிறகு, 1983-ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய இருவரது ஆட்சிக் காலத்திலும் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர் கார்த்திகேயன். கார்த்திகேயன். கார்த்திகேயனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் கணவர் வி.கே.நடராஜன் உள்பட 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.