சென்னை தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன் காலமானார்
சென்னை: சென்னை தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன் ( வயது 77) இன்று அதிகாலை காலமானார்.
உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் அவர் காலமானார்.
சென்னை பெருங்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு நல்லிகுப்புசாமி செட்டியார் உள்ளிட்ட பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அஞ்சலிக்குப் பின்னர் நாளை காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
மறைந்த ஏ. நடராஜனுக்கு மனைவி ரமீலா, மகன் செந்தில்குமார், மகள் மாலதி ஆகியோர் உள்ளனர். திருச்சியைச் சேர்ந்த நடராஜன், 1963ஆம் ஆண்டு திருச்சி அகில இந்திய வானொலியில் இணைந்தார். பின்னர் கோயம்புத்தூர் வானொலி நிலையத்தின் இயக்குநரானார். இதன் பின்னர் தூதர்ஷனின் சென்னை மண்டல இயக்குநரானார். அவர் 1996ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
இருப்பினும் அவரது பணித் திறமையை பாராட்டு மேலும் 2 ஆண்டுகள் பணிநீடிப்பு வழங்கப்பட்டது. தூர்தர்ஷனில் இயக்குநராக பணிபுரிந்த போதும் எழுத்தாளராகவும் இசை ஆர்வலராகவும் திகழ்ந்தவர் ஏ. நடராஜன்.