கொலைமிரட்டல் புகார்: என் மீது புகார் சொன்ன நபர் யார் என்றே தெரியாது - மாஜி டிஜிபி நடராஜ்
சென்னை: என் மீது பரப்பப்பட்டுள்ள அவதூறு உண்மைக்கு புறம்பானது. நான் கொலை மிரட்டல் விடுத்ததாக என் மீது புகார் கொடுத்த நபர் யார் என்றே தெரியாது என்று முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.சுதன் கொடுத்துள்ள புகார் கொடுத்தார் அந்த மனுவில், பெசன்ட்நகர் கலாஷேத்ரா காலனி கம்பர் தெருவில் வசித்து வருகிறேன். எனது பக்கத்து வீட்டில், முன்னாள் டி.ஜி.பி.யும், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவருமான ஆர்.நட்ராஜ் வசித்து வருகிறார்.
அவர் தனது வீட்டை பெரிதாகக் கட்டுகிறார். ஆனால் இதற்குத் தேவையான செங்கல், கருங்கல், சிமெண்ட், தண்ணீர் டாங்க் போன்றவை தெரு முழுவதும் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் எனது அலுவலகத்துக்கு செல்லும் வழியில் தடங்கல் ஏற்பட்டது. மற்ற பொதுமக்களுக்கும் இந்தத் தெருவில் செல்வதற்கு அசவுகரியம் ஏற்பட்டது.
இதுகுறித்து கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் எனது அலுவலக வாசலில் இருந்த தளவாடங்கள் அகற்றப்பட்டன.
தளவாடங்களை அகற்றும்போது, சாதா உடையில் வந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் என்னையும் எனது ஜூனியர் வழக்கறிஞர்களையும் மிரட்டினர். தெரு ஆக்கிரமிப்பில் இனிமேலும் தலையிடக்கூடாது என்று கூறினர். ஆனால் அந்தத் தெருவை ஆக்கிரமித்துள்ள அனைத்து கட்டிட தளவாடங்களையும் அகற்ற வேண்டும் என்று மாநகராட்சியில் மீண்டும் புகார் கொடுத்தேன்.
மாநகராட்சி அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, அவற்றை உடனே அப்புறப்படுத்தும்படி ஆர்.நட்ராஜை எச்சரித்து விட்டுச் சென்றனர். இதனால் ஆவேசம் அடைந்த நட்ராஜ் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதற்கிடையே மாநகராட்சி அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்(சி.எம்.டி.ஏ.) திட்ட அனுமதி பெறாமலேயே கூடுதலாக இரண்டு தளங்களைக் கட்டினார். எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, அந்த கட்டிடத்தின் விபரங்களைக் கேட்டு கடந்த நவம்பரில் மாநகராட்சியிடம் விண்ணப்பித்தேன்.
அதைத் தொடர்ந்து 24ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பல்வேறு விதிமீறல்களை குறித்துச் சென்றனர். இதனால் என் மீதும் எனது ஜூனியர்கள் மீதும் பொய் வழக்கு போடும் முயற்சியில் நட்ராஜ் ஈடுபட்டார். இதற்காக சில போலீஸ் அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் அளித்தார், கடந்த 25ஆம் தேதி எட்டு ஆர்டர்லி போலீசார் வீட்டுக்குள் நுழைந்து அசிங்கமாகப் பேசி, என்னையும் ஜூனியர் வக்கீல்களையும் கட்டைகளால் கண்மூடித்தனமாக அடித்தனர். அலுவலகத்தில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களை அடித்து உடைத்தனர்.
வழக்கையும், தகவலுக்கான விண்ணப்பத்தையும் 24 மணிநேரத்தில் திரும்பப் பெறாவிட்டால் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழக்குகளை பொய்யாக போடுவதாகவும், மீண்டும் தாக்குதல் நடத்துவதாகவும் அவர்கள் மிரட்டினர். போகும் போதும் வழக்குதாரர்கள், ஜூனியர் வழக்கறிஞர்களின் வாகனங்களை உடைத்துவிட்டுச் சென்றனர். அந்த 8 பேரில் யுவராஜ், விஜேஷ், சுரேஷ், ஹங்கெல், உதயகுமார் ஆகிய தலைமைக் காவலர்களும், மோகன் என்ற புழல் சிறை துப்புரவுப் பணியாளர் மட்டும் எங்களுக்கு அடையாளம் தெரியும்.
3 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்ட நட்ராஜுக்கு அரசுச் செலவில் 20 ஆர்டர்லிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு கட்டும் பணியில் கூலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர். எனவே இதில் விளக்கமான விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே எனக்கும் எனது ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஆர்.நட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் கே.சுதன் கொடுத்துள்ள புகார் குறித்து முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''என்னை சம்பந்தப்படுத்தி உண்மைக்கு புறம்பான செய்தி வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றேன். அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் யார் என்று எனக்கு தெரியாது.
சட்டவிரோத நோக்கத்தில் இம்மாதிரியான அவதூறான செய்திகளை அவர் பரப்பியுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த செய்தி எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அரசு பணியில் இருந்த காலத்திலும், பொது வாழ்விலும் எனது தனி வாழ்விலும் நேர்மையான, உயர்ந்த கோட்பாடுகளை கடைப்பிடித்து வருகிறேன்.
தற்போது பல தன்னார்வ தொண்டு அமைப்புகளோடு கல்வி, சமுதாய நல்லொழுக்கம், சுகாதாரம், சுற்றுப்புற சூழல், நேர்மையான பொது சேவை போன்றவற்றில் என்னால் ஆன உழைப்பை தன்னலம் கருதாது மக்களுக்கு அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இம்மாதிரி தவறான உண்மைக்கு புறம்பான சட்டவிரோதமான நோக்கத்துடன் புகார்களை பரப்புகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று டிஜிபி நடராஜ் கூறியுள்ளார்.