அதிமுகவிலிருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கம் ரத்து: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் டிஜிபி நீக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பு பற்றி தந்தி டிவி நடந்த நிகழ்ச்சியில், 12-ம் தேதி காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பான வெள்ள நிவாரணம் குறித்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி தொலைபேசியில் கருத்துக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன். அப்போது அவரது புகைப்படத்திற்கு பதில் முன்னாள் டிஜிபி நடராஜ் புகைப்படத்தை காட்டிவிட்டனர். இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ந்து போனது. இதையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆர்.நட்ராஜ் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 13ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதே நேரத்தில் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் தர கட்சி தலைமையின் அனுமதி கேட்டு காத்திருந்தார் நட்ராஜ். அவரது விளக்கத்தை அதிமுக ஏற்றுக்கொண்டு மீண்டும் நட்ராஜூக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நடராஜ் நீக்கம் குறித்து கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. ஆர்.நடராஜ் தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக செயல்படுவார் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.