காவல்துறை செயலிழந்து போய் விட்டது... திமுகவில் சேர்ந்த மாஜி டிஐஜி ஜான் நிக்கல்சன் தாக்கு!
நாகர்கோவில்: முன்னாள் போலீஸ் டிஐஜி ஜான் நிக்கல்சன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் நிக்கல்சன். பல்வேறு காவல்துறை பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அவர் அவரது முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2013ம் ஆண்டு ஓய்வு பெற்றவரான ஜான் நிக்கல்சன், நேற்று நடந்த ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போதும் உடன் இருந்தார்.
திமுகவில் இணைந்த கையோடு அதிமுக அரசை கடுமையாக தாக்கி பேட்டியும் கொடுத்துள்ளார் ஜான் நிக்கல்சன். அவர் கூறுகையில், தமிழகத்தில் அரசு இயந்திரம் முழுமையாக முடங்கிக் கிடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது. வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மக்கள் பயத்தில் உள்ளனர்.
இதற்கெல்லாம் விமோச்சனம் வேண்டும் என்றால் அது திமுகவால்தான் முடியும் என்ற நம்பிக்கையில்தான் திமுகவில் இ்ணைந்தேன்.
காவல்துறை முன்பு போல இல்லை. சுதந்திரம் இல்லை. செயல்பாடே இல்லாத துறையாக காவல்துறை தற்போதைய ஆட்சியில் மாறி விட்டது. சாமானிய மக்கள் போலீஸாரைப் பார்த்துப் பயப்படக் கூடாது. ஆனால் இன்று போலீஸாரைப் பார்த்து மக்கள் பயந்து நடுங்கும் நிலையே உள்ளது என்றார் நிக்கல்சன்.