முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் தற்கொலை
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருவொற்றியூர் கே.பி.கே. குப்பத்தில் வசித்து வருகிறார் சாமி. இவர் சமீபத்தில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரது மனைவி உமா மாரடைப்பால் மரணமடைந்தார்.
தற்போது தி.மு.க. மீனவர் அணி மாநில செயலாளராக உள்ள சாமி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்றுள்ளார்.
வீட்டில் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் (28), அவரது மனைவி பிரஜன்யா (23), மகள் இனியா (1) ஆகியோர் இருந்தனர். நேற்று இரவு இனியவன் மாடியில் தூங்க சென்றார். பிரஜன்யா, குழந்தையுடன் வீட்டின் கீழ் பகுதியில் தூங்கினார்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இனியவன் கீழே வரவில்லை. எனவே பிரஜன்யா மாடிக்கு சென்று பார்த்தார். அறை கதவை தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது இனியவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. திருவொற்றியூர் போலீஸார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இனியவன் தற்கொலை குறித்து அறிந்த கே.பி.பி.சாமிக்கு உடனே ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை திரும்பினார். உடல்நிலை சரியில்லாததால் இனியவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
சாமியின் மகள் உதயா ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். சாமிக்கு பரசுபிரபாகரன் என்ற இன்னொரு மகனும் உள்ளார்.
கே.பி.பி. சாமியின் தந்தையும் திமுகவின் மிகத் தீவிரமாக பணியாற்றியவர் ஆவார். கடந்த திமுக ஆட்சியில் சாமி மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.