திமுகவுக்கு 'அல்வா' கொடுத்து விட்டு மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பிய கருப்பசாமி பாண்டியன்!
சென்னை: திமுக திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன், கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, கடந்த 14 மாதங்களுக்கு முன் கட்சி யில் இருந்து நீக்கப்பட்டார்.
திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன் மீது திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் கட்சியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓரங்கட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனையடுத்து திமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். இதனையடுத்து அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1972, அக்டோபர் 17இல் அதிமுக-வில் இணைந்து எம்ஜிஆரை தலைவராக ஏற்று பணியாற்றத் தொடங்கினேன். என்னை தம்பியாக ஏற்று கட்சியிலும், அரசியலிலும் பல்வேறு பதவிகளையும் தந்து, பொதுவாழ்வில் நிரந்தர இடத்தை அளித்தார் எம்ஜிஆர்.
இதன்பிறகு, ஜெயலலிதாவும் எனக்கு கட்சியில் உயர்ந்த பதவிகளை அளித்து வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். தாயிடம் கோபித்துக் கொண்டு செல்லும் பிள்ளையைப் போல நானும் 15 ஆண்டுகள் வனவாசம் சென்றேன். அங்கு (திமுக) எனது உழைப்பை மதிக்காமல் வஞ்சம் தீர்த்து, அவமானப்படுத்தி வெளியே அனுப்பினர்.
இப்போது, தவறை உணர்ந்து அதிமுகவில் தொண்டனாகப் பணியாற்றக் காத்திருக்கிறேன். அதிமுகவில் இணைய விண்ணப்பித்து இருக்கிறேன். அனுமதி கிடைத்துவிட்டால் வரும் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுகவை வீழ்த்த பாடுபடுவேன் என்று கூறினார் திமுக என்பது கட்டுப்பாடு இல்லாத இயக்கம். ஆனால், அதிமுக ராணுவ கட்டுப்பாடு மிக்க இயக்கம் என்றும் கூறினார்.
சட்டசபை தேர்தலின் போது கட்சியில் இணைய அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஜெயலலிதாவிடம் அப்பாயின்மெண்ட் கேட்டு தொடர்ந்து கடிதம் அளித்து வந்தார் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன்.
நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் இன்று சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை, திருநெல்வேலி மாவட்டம், திமுக-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. கருப்பசாமிபாண்டியன் இன்று நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற கருப்பசாமி பாண்டியன் கடந்த 15 ஆண்டு காலமாக பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே திமுகவில் இருந்து விலகிய பின்னர் ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போது பல மாத காத்திருப்புக்குப் பின்னர் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
கருப்பசாமி பாண்டியனைப் போல திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய காத்திருந்த அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததால் மீண்டும் திமுகவில் இணைந்து திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.