லாரி லாரியாக அதிமுக பிரமாணப் பத்திரங்கள்.. சுத்த வேஸ்ட்.. கழுவி ஊற்றும் மாஜி தேர்தல் ஆணையர்!
அதிமுகவினர் போட்டி போட்டுக் கொண்டு பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளது வேஸ்ட் பேப்பருக்கு போடுவதைத் தவிர வேறு எதற்கும்உதவாது என்று மாஜி தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவினர் லாரி லாரியாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது முட்டாள் தனத்தின் உச்சகட்டம் என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி தமிழ் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் உள்கட்சி சண்டை நாடு முழுவதும் சந்தி சிரித்த நிலையில், கட்சியை கைப்பற்றுவதற்காக தேர்தல் ஆணையத்தில் டன் கணக்கில் லாரிகளில் கொண்டு போய் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து கெத்து காட்டி வருகின்றனர். சின்னம் தங்களுக்குத் தான் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி
முதலில் 6 ஆயிரம் பக்கம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து பிள்ளையார் சுழி போட்டது.
கெத்து காட்டவா?
தமிழகத்தில் இரண்டு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதும் கூட சைலன்ட்டாக ஓ.பிஎஸ் அணி பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்து கொண்டே இருந்தன. நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் கையெழுத்து வாங்க உத்தரவிட்டார்.
12 லட்சம் பிரமாணப் பத்திரங்கள்
பழனிசாமி அணியும் போட்டிக்கு பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் நிலவரப்படி ஓ.பன்னீர்செல்வம் அணியை விட பழனிசாமி அணியே அதிக பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளது. இரு அணி சார்பிலும் சுமார் 12 லட்சம் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதோடு தீபாவின் ஏற்கனவே 50 ஆயிரம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த நிலையில் விரைவில் தானும் லட்சக் கணக்கில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்வேன் என்று கூறியுள்ளார்.
வேஸ்ட்டு பேப்பர் போடலாம்
ஆளாகுக்கு போட்டி போட்டு பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்வதன் பயன் குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஒருவரிடம் தமிழ் ஒன் இந்தியா பேட்டி கண்டது, பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில்: அதிமுகவினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் வேஸ்டு பேப்பராக எடைக்குப் போடத் தான் பயன்படும் என்று கூறினார்.
படிக்கவே 10 வருஷமாகும்
முட்டாள்கள் தான் இது போன்று லாரி லாரியாக பிரணமாப் பத்திரங்கள் தாக்கல் செய்வார்கள் என்றும், இவற்றையெல்லாம் தனியாக ஒரு அதிகாரியை போட்டு படித்தாலும் பத்து ஆண்டுகள் ஆனாலும் படித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்று கூறினார். எதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் அணுகப் போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மானத்தை வாங்கும் கட்சி சண்டை
தேர்தல் ஆணையத்திற்கே சவால் விடுக்கும் வகையில் ஸ்தம்பிக்க வைத்துள்ள கட்சிக்காரர்களின் போட்டி என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா. அல்லது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரே கழுவி ஊத்தும் நமது அரசியல்வாதிகளை எண்ணி வெட்கப்படுவதா என்ற நிலையில் தான் இன்று தமிழகம் உள்ளது.