திங்கிற பிஸ்கட்டுக்கு 8% ஜிஎஸ்டி... தங்க பிஸ்கட்டுக்கு 3% தானாம்... ப.சிதம்பரம் 'பொளேர்'
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகிற பிஸ்கட்டுக்கு 8 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ள மத்திய அரசு, தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம்தான் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது என்று சாடியுள்ளார் முன்னாள் மத்திய
புதுக்கோட்டை: சாப்பிடுகிற பிஸ்கட்டுக்கு 8 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதித்துள்ள மத்திய அரசு, தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம்தான் ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தர்ம.தங்கவேல் தலைமையில் ஆலங்குடி தொகுதி தென்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஆவணத்தான்கோட்டையில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், "நிபுணர்களின் கருத்தைக் கேட்காமல் மோடியும் அருண்ஜெட்லியும் கொண்டுவந்ததுதான் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு. திங்கிற பிஸ்கட்டுக்கு 8 விழுக்காடு வரி, ஆனால் தங்க பிஸ்கட்டுக்கு வெறும் 3 சதவிகித வரி. எந்தப் பொருளுக்கு என்ன வரி என்று வரியை போட்டவர்களுக்கே தெரியவில்லை. இந்த மாதிரி இருக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சி. ஆனால் தமிழ்நாட்டில்?
பயப்படும் எடப்பாடி பழனிச்சாமி
போனது போக தம்மிடம் இருக்கிற எம்.எல்.ஏ.க்களில் யாரும் வெளியே போய்விடக்கூடாது என்று தினமும் பலமுறை கடவுளை வழிபடுகிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. பத்து எம்.எல்.ஏ.க்கள் ஒண்ணா சேர்ந்து எடப்பாடியைப் பார்க்கப் போனால் "அய்யய்யோ... நீங்க ஏன் வந்தீங்க? சொல்லியனுப்பியிருந்தால் நானே எழுந்தோடி வந்திருப்பேனே' என்று எழுந்து நிற்கிறார் எடப்பாடி... அவ்வளவு பயம்.
பசுவதை தடையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை
பசுவதை தடையை காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு பசுவை வளர்ப்பதற்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆட்டுக்கறி கிலோ 600 ரூபாய், மாட்டுக்கறி 250 ரூபாய்தான். அதனால்தான் மாட்டுக்கறியை அதிகம்பேர் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
தொகுதிப்பக்கம் எட்டிப்பாக்காத அதிமுக எம்பி
சிவகங்கை எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட இந்த ஆலங்குடி தொகுதிக்கு இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை முறை வந்திருக்கிறார் எம்.பி.யான பி.ஆர்.செந்தில்நாதன். போனமுறை சிவகங்கைக்கு நான் எம்.பி. இந்த ஆலங்குடி பகுதியில் 82 குளங்களைத் தூர்வாரினேன். பதினோரு வங்கிக் கிளைகள் திறந்தேன். இப்ப எதை வாரினார், எதனை திறந்தார் அவர்? அவர்கள் இனியும் வருவார்கள். ஓட்டுக்கு எவ்வளவு என்று பணம் கொடுக்க வருவார்கள்.
காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது
நம்ம காங்கிரஸ் கட்சி இப்ப பலமில்லாமல் இருக்கு. நம்ம கட்சியின் பலமே வயதானவர்கள்தான். பலவீனமோ இளைஞர்கள் நம்மிடம் இல்லாததுதான். வெறும் ஐந்து ரூபாயை வாங்கிக்கொண்டு நம்ம வீட்டுப் பிள்ளைகளை, நம்ம கட்சியில் சேர்ப்போம். அப்புறமாக அடுத்தவர்களைச் சேர்ப்போம்.
குடும்பக் கட்சிதான் காங்கிரஸ்
இது குடும்பக் கட்சி என்று சொல்வார்கள் இல்லையா...? சொன்னால் சொல்லட்டும். நம்ம பிள்ளைகள் சேராவிட்டால் வேறு யார் நம்ம காங்கிரஸில் சேருவார்கள்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.