முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் - அப்பல்லோவில் ரோசய்யா பேட்டி
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சரின் சிகிச்சை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக லண்டன் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்துள்ளனர். தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர் விரைவில் நலம்பெற வேண்டி அதிமுகவினர் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் உடல்நலம் குறித்து அறிய அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பக்கத்து மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று மாலை சென்னை வந்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற அவர், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் அடைய இறைவனை பிரார்த்திகிறேன் எனவும் அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் எனவும் கூறினார்.