தமிழக மீடியாக்களா, அப்பப்பா... மனம் திறந்த முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!
தமிழக மீடியாக்கள் நாட்டிலுள்ள அனைத்து மீடியாக்களுக்கும் முன்மாதிரியானது என்று முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழக மீடியாக்கள் மக்களை ஜனநாயக பாதையில் அழைத்து செல்ல உதவுவதாக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 13 மாதங்கள் பொறுப்பு ஆளுநராக இருந்தது குறித்து வித்யாசாகர் ராவ் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். முக்கியமான அந்த நாட்கள் (Those Eventful Days) என்ற பெயரில் அவர் எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயடு, ஆளுநர் பன்வரிலால், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஜெயலலிதாவுடனான சந்திப்பில் தொடங்கி சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரிய போது எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கை உள்பட 12 அத்தியாயங்களாக தனது அனுபவத்தை வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளார்.
மரியாதை உண்டு
புத்தக வெளியீட்டு விழாவில் வித்யாசாகர் ராவ் பேசியதாவது : தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் நான் ஆளுநராக பொறுப்பேற்பதற்காக முதன்முறை சென்னை வந்த போது அவர் விமான நிலையம் வரமாட்டார் என்றே நினைத்தேன். ஏனெனில் தலைவர்கள் வரவேற்பதற்காக அவர் விமான நிலையம் வருவது மிகவும் அரிதானது. ஆனால் நான் அதிர்ஷ்டசாலி, அவர் அன்போடு விமான நிலையம் வந்து எனக்கு வரவேற்பு அளித்தார்.
அவமரியாதை செய்ததில்லை
ஆளும் கட்சியினருடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. எனினும் தமிழக அரசியல் அசாதாரண சூழலால் எதிர்க்கட்சிகள் எதிர்கருத்துடன் இருந்தன. ஆனால் அவர்கள் எப்போதுமே என்னை அவமரியாதை செய்தது கிடையாது. பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்னை வந்த சந்தித்து விட்டு சென்றிருக்கின்றனர். அவர்களுடனும் எனக்கு நட்புறவே இருந்தது.
ஆச்சரியப்பட்டு போனேன்
தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் நாட்டிலேயே முன்மாதிரியானவை. ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று நோக்கி அதனால் நடைபெறப் போவது என்ன என்பதை விரிவாகச் சொன்னார்கள். ஒரு சில தலையங்கங்கள் நான் முடிவு எடுப்பதற்குக் கூட உதவி இருக்கின்றன.
ஜனநாயகம் காக்கப்படுகிறது
இதற்கு முன்னர் இதே போன்றகாலச் சூழலின்போது நடந்தவற்றை மிக அழகாக எடுத்துச் சொல்லி இருந்தனர். குறிப்பாக ஜனநாயகத்தை சரியான முறையில் கையாளும் மீடியாக்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நான் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதரவளித்தனர்
சில நேரம் ஒரு வழக்கறிஞரை நியமித்து பிரச்னைக்கு தீர்வு கேட்டால் லட்சக்கணக்கில் செலவ செய்ய வேண்டும். ஆனால் சில ரூபாய் கொடுத்து செய்தித்தாள்களை வாங்கினால் போதும் அதில் எண்ணற்ற கருத்துகள், ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. மக்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும் மீடியாக்களுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். ராஜ்பவனை மக்கள் பார்வைக்காக திறந்து விட்ட போது மக்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்தனர் என்று வித்யாசாகர் ராவ் பேசினார்.