ஜெயலலிதா முதல்வரானதற்கு நடராஜன் தான் காரணம்... சந்திரலேகா சொன்ன உண்மை!
ஜெயலலிதா முதல்வரானதற்கே நடராஜன் தான் காரணம் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா அரசியலை விட்டே விலக முடிவெடுத்த போது அவருடனேயே உறுதுணையாக இருந்து தொடர்ந்து அரசியலில் செயல்பட ஊக்கம் அளித்தவர் நடராஜன் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா தெரிவித்துள்ளார்.
நிழல் உலக அரசியல்வாதி, ஜெயலலிதாவை பின்னால் இருந்து இயக்கியவர் என்று அறிமுகமாவதற்கு முன்னர் ம. நடராஜன் மக்கள் தொடர்பு அதிகாரியாகத் தான் தன்னுடைய பணியை தொடங்கினார். கடலூர் மாவட்டத்தில் இருந்து தான் அவருடைய பிஆர்ஓ பணி தொடங்கியது.
சந்திரலேகா மூலமே எம்ஜிஆர், ஜெயலலிதா என்று நடராஜன், சசிகலாவின் அரசியல் நகர்வுகள் தொடங்கின. இந்நிலையில் நடராஜன் உயிரிழந்ததையடுத்து சந்திரலேகா நடராஜனின் உடலை நேரில் வந்து பார்த்தார்.
சந்திரலேகா நேரில் அஞ்சலி
சென்னை பெசன்ட் நகர் வீட்டில் இன்று காலையில் உயிரிழந்த ம. நடராஜனின் உடலுக்கு முன்னாள் ஐஎஎஸ் அதிகாரி சந்திரலேகா அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டதாக தெரிவித்தார்.
சிறப்பாக செயல்படுபவர்
நான் தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த போது நடராஜன் என்னுடைய பிஆர்ஓவாக இருந்தார். ஒரு நல்ல உழைப்பாளி, எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்.
கடைசி வரை நல்ல நண்பர்கள்
மின்சாரத்துறையில் வசூலிக்கப்படாமல் இருக்கும் கட்டணம் குறித்த விவரங்களை அப்போதைய முதல்வர் கோரி இருந்தார். இந்தப் பணியில் நான் பணியாற்றிய மாவட்டம் தான் சிறப்பாக பணியாற்றியதாகச் சொன்னார்கள், அந்தப்பணி சிறப்பாக அமைய எனக்கு உறுதுணையாக இருந்தவர் நடராஜன் தான். அதன் பிறகு தொடர்ந்து கடைசி வரையிலும் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருந்திருக்கிறோம். என்னை பொருத்தவரையில் தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன்.
ஜெயலலிதாவை முதல்வராக்கிய நடராஜன்
எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. எம்ஜிஆர் இறந்த பிறகு அரசியலே வேண்டாம் என்று ஜெயலலிதா ஒதுங்கியபோது அவருடனே இருந்தவர் நடராஜன். ஜெயலலிதா முதல்வரானார் என்றால் அதற்கு முக்கிய காரணம் நடராஜன் தான் என்றும் சந்திரலேகா தெரிவித்துள்ளார்.