விளம்பரத்திற்கு ஏங்கி சகாயத்துக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி
சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பிஆர்பி. கிரானைட் நிறுவனத்தினர், குவாரிகளில் நரபலி கொடுத்ததாக நேற்று சேவற்கொடியோன் என்பவர் சகாயத்திடம் புகார் கூறினார். இதையடுத்து சேவற்கொடியோன் குறிப்பிட்ட இடத்தை தோண்டும் பணி நடந்தது. ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் இனி தோண்ட முடியாது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து, காவல்துறை ஒத்துழைக்க மறுக்கிறது. எனவே நான் இங்கிருந்து சென்றால், நரபலி நடந்ததற்கான ஆதாரம் அழிக்கப்படும் என்று கூறிய சகாயம் ஐ.ஏ.எஸ். இரவு அதே இடத்தில் தங்கினார்.
இரவு முழுதும் அங்கேயே சகாயம் இருந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஓய்வு பெற்ற தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் கூறியதாவது: சகாயம் ஒரு விளம்பரப்பிரியராக இருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு என்று கடமை, பொறுப்பு இருக்கிறது. தவிர, தனது பணியை நேர்மையுடன் செய்வதோடு, வீண் விளம்பரம் இன்றியும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்பட வேண்டும்.
உள்நோக்கத்தோடு, தரையில உட்கார்ந்து இட்லி சாப்பிடுவது, ஊடகங்களை வரவைத்து போஸ் கொடுப்பது போன்றவை தவறான செயல்கள். சகாயத்துக்கு கோர்ட் கொடுத்த வேலையை செய்வதை விட்டுவிட்டு, ஏதேதோ செய்து விளம்பரம் தேடறார். ஒரு நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்படி செயல்பட மாட்டார். கோர்ட் கொடுத்திருக்கும் வேலை, கிரானைட் குவாரி தொடர்பான அத்துமீறல்களை ஆராய்வதுதான்.
நடுவே ஒருவர் வந்து, இங்கே நரபலி நடந்திருக்கிறது என்று கூறினால் அவரிடம் புகார் வாங்கி அந்த மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க வேண்டும். எந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இப்படித்தான் செயல்படுவார். செயல்படவேண்டும்.
அரசியல்வாதி மாதிரி, "இது சரியில்ல அது சரியில்லை" என்பது, அங்கேயே உட்கார்ந்துகொள்வது, பேண்ட் சர்ட்டோடு படுத்துக்கொண்டு போஸ் கொடுப்பது.. இதெல்லாம் எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் செய்யமாட்டார். செய்யக்கூடாது.
லஞ்சம் வாங்குபவர்கள் மனநோயாளிகள். அதுபோல, புகழ் உச்சிக்குப் போகணும் என்று மனரீதியாக சகாயம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நினைக்கிறேன். இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி முருகன் ஓய்வுக்கு பிறகு சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தவர். தற்போது பாஜகவுடன் நெருக்கம் காட்டிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.