ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி குழு ஆய்வு.. நாளை மக்களுடன் சந்திப்பு
Recommended Video
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய உள்ளது.
மக்கள் தங்கள் புகாரை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடி தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், ஆலைத் தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
இதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு இன்று தூத்துக்குடி வந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களை வரவேற்றார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை 10.45 மணியளவில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று மாலை 3 பேர் கொண்ட குழு வருகை தருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் அவர்கள் ஆய்வு செய்வார்கள். நாளை காலை பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் குறை கேட்பார்கள்.
வாய்மொழியாகவும், அல்லது எழுத்துப்பூர்வமாகவும் எப்படி வேண்டுமானாலும், மக்கள் தங்கள் பிரச்சினைகளை அந்த குழுவிடம் தெரிவிக்கலாம். என்ஜிஓக்களும் பங்கேற்று, தங்கள் புகார்களை குழுவிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் வளாகத்தில் நாளை காலை 10.30 மணி முதல் சுமார் 2 மணி நேரம் பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்க கேட்கவும் மனுக்களை பெற உள்ளனர். இவ்வாறு சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இன்னும் 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், இப்போது பிரஸ் மீட் செய்து, மக்களை குறைகளை அளிக்க சொல்கிறீர்களே, மக்களால் எப்படி அதற்குள் தயாராக முடியும் என்ற நிருபர்கள் கேள்விக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்டோரா மூலம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளோம். மீடியாக்கள் உதவியால், மக்களை விரைவில் இந்த செய்தி சென்று சேரும் எனவும் நம்புகிறேன் என்றார் அவர்.
இதனிடையே மாலை 4.30 மணியளவில் ஸ்டெர்லைட் ஆய்வு குழு தூத்துக்குடி வந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து 6 வாரங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்று அப்போது நிருபர்களிடம் தருண் அகர்வால் தெரிவித்தார். நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில், இக்குழு ஆய்வு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தூத்துக்குடி, புதுக்கோட்டை உப்பாற்று ஓடை அருகே, ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் வைகோ பார்வையிட்டார். எனவே, தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. நாளை ஓய்வு பெற்ற நீதிபதி குழு முன்பாக புகார்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.