நீதித்துறை நெருக்கடியில் இருக்கிறது தெளிவாகிறது... முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்!
நீதித்துறை நெருக்கடியான நிலையில் இருக்கிறது என்பதைத் தான் 4 நீதிபதிகளின் குற்றச்சாட்டு தெளிவுபடுத்துவதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
சென்னை : உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் முதன்முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் நீதித்துறை நெருக்கடியில் இருப்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியதாவது :
நீதித்துறையில் இருக்கும் நெருக்கடியை 4 நீதிபதிகளின் குற்றச்சாட்டு தெளிவுபடுத்துவதாகவே நான் கருதுகிறேன். கடந்த மாதத்தில் பிரசாந்த் பூஷன் போட்ட ஒரு வழக்கில் நீதிபதி செல்லமேஸ்வர் அளித்த தீர்ப்பை உடனடியாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ரத்து செய்தார்.
ஒடிசாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது என்ன குற்றச்சாட்டு என்றால் அவரும் சிலரும், சதி செய்து மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு உச்சநீதமன்றத்தில் இருந்து சாதகமான தீர்ப்பை பணம் கொடுத்து பெற்றுத் தருவதற்காக உறுதியளித்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது, ஆனால் மத்திய புலனாய்வுத்துறையின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்பது தான் பிரசாந்த் பூஷனின் வழக்கு. சிபிஐயும், வருமான வரித்துறையின் இன்றைய நிலை தெரியும் என்பதால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்பது தான் பிரசார்ந்த் பூஷனின் வழக்கு.
நீதித்துறையில் தற்போது 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் 3 நீதிபதிகள் ஓய்வுபெற்றனர், ஆனால் இன்னும் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. அதே போன்று தமிழகத்தை சேர்ந்த ஒரு நீதிபதி கூட உச்சநீதிமன்றத்தில் இல்லை, நெருக்கடியை உணர்த்துவதாகத் தான் இந்தநீதிபதிகளின் புகார்களை பார்க்க வேண்டும். இது ஒரு அசாதாரணமான சூழல், நீதிபதிகளின் குற்றச்சாட்டு மிகப்பெரிய விவாதப் பொருளாகும் என்பது மட்டும் உறுதி.
உச்சநீதிமன்ற நீதிபதிகளே குற்றச்சாட்டு சொல்கிறார்கள் என்றால் மக்களும், தங்களின் பிரச்னைக்காக போராடும் தொழிலாளர்களும் எங்கு போய் முறையிடுவார்கள் என்பது தான் இப்போதைய கேள்வி என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.