எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி மாஜி அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் வழக்கு
சென்னை: கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் எச் ராஜாவை கைது செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதை போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பவே தனது அனுமதியின்றி தன்னுடைய அட்மின் போட்டுவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் எச் ராஜா. இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, தமிழை தந்தை பெரியார் சனியன் என்றார் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் தபெதிகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் எச் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாட்டுக்குள் எச்.ராஜா நுழையவும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார் எச். ராஜா என முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.