முத்துக்குமாரசாமி தற்கொலை.. சிக்குகிறார் மாஜி அமைச்சர் தளவாய் சுந்தரம்?
சென்னை: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை அடுத்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரமும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையில் சிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை வேளாண்மைத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தளவாய் சுந்தரத்தின் உறவினர் ஒருவரது வீடு நெல்லை என்ஜிஓ காலனியில் உள்ளதாகவும், இந்த வீட்டில் வைத்துதான் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியை உள்ளூர் அதிமுகவினர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் குமரி மாவட்டத்தில் அப்போது அதிமுக தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய அக்ரி கிருஷ்ண மூரத்தியும், அங்கு வந்து முத்துக்குமாரசாமியை மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக தளவாய் மற்றும் அக்ரிக்கு எதிராக கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றதாகவும், இதனால் அக்ரியை தொடர்ந்து, தளவாய் சுந்தரம் கட்சி பதவியும் பறிக்கப்படலாம் என அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.