மீண்டும் தாய்க் கழகத்திற்கே திரும்பினார் முல்லைவேந்தன்!
மீண்டும் திமுகவில் இணைந்தார் முல்லைவேந்தன்.
Recommended Video
சென்னை: முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அதேபோல, திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியனும் மீண்டும் கட்சியில் சேர்ந்தார்.
திமுகவின் தருமபுரி மாவட்ட செயலாளராகவும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறையின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் முல்லைவேந்தன்.
நோட்டீஸ் வழங்கியது
2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, அப்போது தர்மபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த முல்லைவேந்தனுக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது.
மன்னிப்பு கேட்கவில்லை
ஆனால் அதற்கு முல்லைவேந்தன் சரியான விளக்கம் அளிக்கவில்லை. அதோடு கட்சிக்கு முல்லைவேந்தன் துரோகம் செய்துவிட்டார் என்று கூறி அவரை திமுகவிலிருந்து விலக்கி விட்டு உத்தரவிட்டார் அன்பழகன். ஆனாலும் முல்லைவேந்தன் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினால் மீண்டும் கட்சிக்குள் சேர்த்து கொள்வோம் என்று அன்பழகன் தெரிவித்தார். ஆனால் முல்லைவேந்தன் கடைசிவரை மன்னிப்பு கேட்கவே இல்லை.
விலகி இருந்தார்
இதனையடுத்து, 2015-ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்தார். ஆனால் அங்கே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்புமும் முக்கியத்துவமும் முல்லைவேந்தனுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தேமுதிகவிலிருந்தும் சற்று விலகிதான் இருந்தார். பின்னர் கருணாநிதி சிகிச்சையின்போது காவிரி மருத்துவமனையிலும், பின்னர் அஞ்சலி நிகழ்ச்சியிலும் தலைகாட்டிவிட்டு போனார்.
அறிவாலயம் வந்தார்
இதனிடையே திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, திமுகவிலிருந்து திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மூலம் முல்லைவேந்தனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று முல்லைவேந்தன் திமுகவில் இணைய முடிவெடுத்தார். அதன்படி தற்போது சென்னை வந்த அவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அண்ணா அறிவாலயம் வந்தார்.
கருப்பசாமி பாண்டியன்
பின்னர், அங்கு திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் புதிதாக தலைமை பொறுபேற்றுக் கொண்டதற்காக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் முல்லைவேந்தன். இதனை தொடர்ந்து தன்னை ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொண்டார். அதேபோல, திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியனும் மீண்டும் கட்சியில் சேர்ந்தார்.