அதிமுகவில் இருந்து மீண்டும் விலகி திமுகவிற்கு போகும் கண்ணப்பன்? மறுபடியும் முதல்ல இருந்தா?!
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், விரைவில், அ.தி.மு.கவில் இருந்து விலகி, தி.மு.கவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிந்ததில் இருந்தே அ.தி.மு.கவும், தி.மு.கவும் மாற்றுக் கட்சியினரைத் தங்களது கட்சிக்கு இழுக்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனைக் கடுப்பேற்றும் வகையில் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கத் தடை போட்டு அதிமுக தலைமை. சட்டசபைத் தேர்தலில் சீட்டும் தரவில்லை... கட்சிப் பொறுப்பும் தரவில்லை என்று அதிருப்தியில் இருக்கும் அவர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளாராம்.
1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.
1996ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.
2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார்.
2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது.
திமுகவில் இருந்துகொண்டே தேமுதிகவில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் முக்கியத்துவம் இல்லை என்ற வருத்தம், ராஜ கண்ணப்பனுக்கு அதிகமாக உள்ளது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, பொறுப்பு கிடைக்கும் என, அவர் காத்திருக்கிறார். ஆனால், கிடைக்கவில்லை.
சட்டசபை தேர்தலில் போட்டியிட, சீட் கிடைக்கும் என, எதிர்பார்த்தார், நடக்கவில்லை. யாதவ சமூகம் சார்பில் போட்டியிட்ட, வாலாஜா கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், கோகுல இந்திரா ஆகியோரும் தோல்வியை தழுவினர். அதனால், அமைச்சரவையிலும், யாதவ இனத்தவருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது.
இதனால், கட்சித் தலைமை மீது கோபத்தில் இருக்கும் ராஜ கண்ணப்பன், தன் ஆதரவாளர்கள் மற்றும் யாதவ சமுதாய பிரதிநிதிகளுடன், தி.மு.கவில் சேர திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி மூலம் பேச்சு நடத்தி வருகிறார் விரைவில், அக்கட்சியில் இணைவார்.
இதன் வெளிப்பாடாக, ஜூலை, 31ம் தேதி, சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த, பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தை புறக்கணித்தார். அழைப்பிதழில் அவர் பெயரை போட்டிருந்தும், கலந்துகொள்ள மறுத்து விட்டார் என்று ராஜகண்ணப்பனுக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போன போது அங்கு உரிய மரியாதை இல்லை என்றுதான் அதிமுகவிற்கு மீண்டும் திரும்பினார். இப்போது அதிமுகவில் மரியாதை இல்லை என்று திமுகவிற்கு திரும்பப் போகிறாராம் ராஜ கண்ணப்பன்.
கட்சியை விட்டு ராஜ கண்ணப்பன் போனால் போகட்டும் திமுகவில் இருந்து சரியான திமிங்கலத்தை இழுக்க திட்டமிட்டுள்ளதாம் அதிமுக.