தலைமறைவு செந்தில் பாலாஜிக்கு எந்த நேரத்திலும் 'காப்பு'... முன்ஜாமீனுக்கு போராட்டம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டசபை உறுப்பினருமான செந்தில் பாலாஜி டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர்.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களில் பலரை கைது செய்ய தமிழக போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.95 லட்சம் மோசடி
செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி 14 பேரிடம் 95 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக கணேஷ் என்பவர் புகார் அளித்தார்.
மோசடி வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குடகு ரிசார்ட்டில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியை கைது செய்யவும் போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
முன்ஜாமீன் கோரி மனு
இதையடுத்து அவர் தலைமறைவானதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
விரைவில் விசாரணை
மோசடி வழக்கில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.