ஈரோடு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... தினகரன் அணி தோப்பு வெங்கடாசலம் புறக்கணிப்பு
ஈரோடு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்வை, முன்னாள் அமைச்சரும் தினகரன் ஆதரவாளருமான தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. புறக்கணித்தார்.
ஈரோடு: ஈரோட்டில் நடக்கவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னாள் அமைச்சரும் தினகரன் ஆதரவாளருமான தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. புறக்கணித்தார். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் தோப்பு வெங்கடாசலத்தின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார்கள் ஈரோடு அதிமுகவினர்.
அதிமுகவின் அணிகள் இணைப்பு நிகழ்வு எப்போது நிகழும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அணிகளாய் பிரிந்துகிடக்கும் அதிமுக முக்கிய பிரமுகர்கள், இணைய இந்த விழா ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஆனால் இதுவரை அரியலூர் தொடங்கி மாவட்ட தலைநகரங்களில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அணிகள் இணைய எந்த 'சிக்னலும்' இல்லாத நிலையே நிலவுகிறது. இந்த நிலையில் கொங்கு மாவட்டமான, ஈரோட்டில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான, பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.
அந்தவிழாவில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். இது மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திருவாரூரில் தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா வழியில் மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தினகரன் ஆதரவாளரான தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஈரோட்டில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை புறக்கணிப்பு செய்துள்ளது கொங்கு மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில்...
இதனிடையே வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ. ஆம்பூர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தினகரனின் அனுமதியுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறினார்.