மீண்டும் டிவி சேனல்களில் களமிறங்கும் வளர்மதி, கோகுலஇந்திரா.. சவுண்டு கிழியப்போகுது
டிவி விவாதங்களில் பங்கேற்கும் அதிமுகவினர் பட்டியலில் தாய்க்குலங்களான வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்கும் குழுவின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் என்று தங்களை காட்டிக் கொண்ட வளர்மதி, கோகுலஇந்திரா உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் தெரிவிக்கும் கருத்துகள் அதிமுகவின் கருத்துகள் அல்ல என்று அந்தக் கட்சி கூறி இருந்தது. மேலும் விவாதங்களில் யார் யார் பங்கேற்கலாம் என்ற பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதிமுக தெரிவித்திருந்தது. ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த போது இது போன்று தான் செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் அவர்கள் மட்டுமே விவாதங்களில் பங்கேற்க முடியும்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பலரும் முதல்வர் பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என போட்டி போட்டுக் கொண்டு விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிலையில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி இணைப்புக்குப் பிறகு இவர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் சிலரும், தினகரன் ஆதரவாளர்கள் என்று 18 எம்எல்ஏக்கள் உள்பட தினகரன் நிர்வாகிகளாக நியமித்தவர்களும் விவாதங்களில் பங்கேற்று வருகின்றனர்.
வளர்மதி பேச்சில் அனல் பறக்கும்
இந்நிலையில் இன்று அதிமுக அறிவித்துள்ள செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தாய்க்குலங்களான வளர்மதி, கோகுலஇந்திரா, மகேஸ்வரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதா சிறை சென்ற போது அமைச்சராக பதவியேற்கும் விழாவில் அழுது ஒப்பாரி வைத்தவர் வளர்மதி. இதன் பின்னர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தீச்சட்டி எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல் என்று பலவித பிரார்த்தனைகளை செய்துதன்னை ஜெயலலிதாவின் விசுவாசி என்று காட்டிக் கொண்டவர்.
சசிகலாவிற்கு ஆதரவாக இருந்த வளர்மதி
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவிற்கு பாதுகாப்பு அரணாக இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை வார்த்தைகளால் துவைத்து துவம்சம் செய்தவர். கடைசியில் சசிகலா சிறை சென்ற பின்னர் மவுனமாக இருந்தவர் பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியில் ஐக்கியமானார். இதே போன்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவுடனேயே இருந்தார்.
கோகுல இந்திராவும் விவாதத்தில் பங்கேற்பார்
இந்த 2 பேருடன், சி.ஆர். சரஸ்வதியும் சசிகலாவின் பக்கம் இருந்தார். ஆனால் சசிகலா சிறை சென்ற பின்னர் 3 பெரும் தேவிகளில் 2 பேர் மட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியில் இருக்க, சி.ஆர்.சரஸ்வதி தினகரன் ஆதரவாளராகவே தொடர்ந்து நீடிக்கிறார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்க இருந்த அவரின் பொறுப்பு ஆர்கே நகரில் தினகரன் வெற்றி பெற்ற பின்னர் பறிக்கப்பட்டது.
சபை கலைகட்டும்
ஆக இனி தினகரன் அணிக்கு சவாலாக வளர்மதி, கோகுலஇந்திராவின் அனல் பறக்கும் விவாதத்தை தொலைக்காட்சிகளில் பார்க்க முடியும். இதே போன்று பொன்னையன், வைகைச் செல்வன், சமரசம், ஜே.சி.டி.பிரபாகர், மருதுஅழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, பாபுமுருகவேல் உள்ளிட்டோரும் செய்தித் தொடர்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.