மாஜி எம்.எல்.ஏ மறந்து போன துப்பாக்கியை 'சுட்டவர்' கைது!
சங்கரன்கோவில் மாஜி எம்.எல்.ஏ சுப்பையா பாண்டியன் மறந்து விட்டுப் போன அவரது துப்பாக்கியை எடுத்து, அதை போலீஸாரிடம் ஒப்படைக்காமல் மறைத்து வைத்தவரை போலீஸார் ஒரு வழியாக பிடித்து விட்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் யூனியன் ஆராய்ச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன். கடையநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர் பாதுகாப்புக்காக லைசென்ஸ் பெற்று ஜெர்மன் நாட்டு தயாரிப்பு பிஸ்டல் வைத்திருந்தார்.
தமிழகத்தில் வாக்கிங் செல்லும் அரசியல் பிரமுகர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அடிக்கடி நடந்ததால் இவர் வாக்கிங் செல்லும் போது பாதுகாப்புக்காக துப்பாக்கியையும் கொண்டு செல்வாராம். இதன்படி வழக்கம் நடைபயிற்சிக்கு சென்ற சுப்பையா பாண்டியன் 6 தோட்டாக்கள் லோடு செய்திருந்த துப்பாக்கியை இடப்பில் செருக்கி வைத்திருந்தார்.
ஆராய்ச்சிபட்டி மலைப்பகுதியில் வாக்கிங் சென்று விட்டு மடத்துபட்டியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்ற போது பிஸ்டல் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வாக்கிங் சென்ற இடங்களுக்கு சென்று தேடி பார்த்தும் துப்பாக்கி கிடைக்கவில்லை.
இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசில் புகார் செய்தார். சங்கரன்கோவில் டிஎஸ்பி மாதவன் தலைமையில் நூறறுக்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கியை விடிய விடிய தேடினர். ஆராய்ச்சிபட்டி சுற்று வட்டார கிராம பஞ்சாயத்து தலைவர்களின் உதவியுடன் தண்டோராவும் போட்டனர். துப்பாக்கியை கண்டு எடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்னர்.
துப்பாக்கியில் 6 தோட்டாக்கள் லோடு செய்யப்பட்டுள்ளதால் தவறுதலாக சிறுவர்கள் கையிலோ, அல்லது சமூக விரோதிகள் கையிலோ கிடைத்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்று போலீசாருக்கு தெரியுமாததால் அவர்கள் அனைத்து வழிகளிலும் அதனை தேடி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தண்டோராவை கேட்ட ஆராய்ச்சிபட்டி அருகே உள்ள முத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்ற வாலிபர் மாயமான துப்பாக்கி தன்னிடம் இருப்பதாக சாயமலை பஞ்சாயத்துத் தலைவர் செல்வராஜை தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனடியாக இதுகுறித்து டிஎஸ்பிக்கும், சுப்பையா பாண்டியனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் ராமசாமியிடம் இருந்து துப்பாக்கியையு்ம் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்த காலை பைக்கில் சென்ற போது மடத்துபட்டிக்கும், ஆராய்ச்சிபட்டிக்கும் அருகே உள்ள கல்லில் துப்பாக்கி அனாதையாக கிடந்ததாகவும், அதை எடுத்து வைத்திருந்தாதகவும் தெரிவித்தார்.
ஆனால் துப்பாக்கியை கண்டெடுத்தவுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் மறைத்து வைத்ததால் ராமசாமியை போலீசார் கைது செய்தனர்.