ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது: முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கமளித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கு விசாரணை ஆணையம் முன்பு இன்று காலை மீண்டும் ஆஜரான சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், அப்பல்லோவில் ஜெயலலிதா இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகக் கூறினார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்னை மாநகர காவல் ஆணையராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜார்ஜ்ஜை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்படி, ஜார்ஜ் நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் ஜார்ஜ்ஜிடம் விசாரணை நடத்த வேண்டியிருந்ததால் வியாழக்கிழமை மீண்டும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று வியாழக்கிழமை காலை மீண்டும் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். அவரிடம் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜார்ஜ் அளித்த விளக்கம் குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
விசாரணை ஆணைய வழக்கறிஞர்கள் ஜார்ஜிடம் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்ற கேள்விக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது மருத்துவமனையில் நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் பாதுகாப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தவில்லை என்று ஜார்ஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.