கருணாநிதியின் தேசப் பணியை மறக்க முடியாது.. தேவகவுடா புகழாரம்
கருணாநிதி நாட்டுக்கு ஆற்றிய பணியை மறக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி நாட்டுக்கு ஆற்றிய பணியை மறக்க முடியாது என்று கூறினார்.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு 6 வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய, நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டு அறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, இந்த நாட்டின் மிக மூத்த தலைவர் கருணாநிதி. ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர். தமிழ்நாட்டுக்கு பல சேவைகளை செய்தவர். வாஜ்பாயி, மன்மோகன் சிங் காலத்திலும் என்னுடைய காலத்திலும் அரசு அமைப்பதற்கு காரணமாக இருந்தவர். உறுதியான மனிதர். அவர் இந்த நாட்டுக்காக ஆற்றிய பணியை மறக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல தேசிய அளவிலும் உறுதியான அரசு அமைவதற்கு பங்காற்றியுள்ளார். அவர் உடல் நலம் பெற்று நெடு நாள் வாழ வேண்டும். அவர் நூறு வயதைத் தாண்டியும் வாழ வேண்டும்" என்று கூறினார்.