யுரேனியத்தைப் பிரிக்க உதவும் கரைப்பான் தயாரிக்கும் தொழிற்சாலை.. தூத்துக்குடிமக்கள் பீதி
தூத்துக்குடியில் அணு மின் நிலையத்தில் யுரேனியத்தை பிரிக்க உதவும் வேதிப்பொருளை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனல் மின் நிலையத்தில் யுரேனியத்தை பிரிக்க உதவும் பொருளை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
நம் நாட்டு சுரங்கத்தில் இருந்து குறைந்த அளவே யுரேனியம் கிடைப்பதால் அணு மின் நிலையத்துக்கு தேவைப்படும் யுரேனியம் ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் இயங்கும் மத்திய அணு சக்தி துறைக்கு சொந்தமான கனநீர் ஆலையில் யுரேனியத்தை பிரிக்க உதவும் சால்வென்ட் (கரைப்பான்) என்ற வேதிப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பின்னர் கன நீர் வாரிய தலைவர் வர்மா கூறுகையில், ரூ.38 கோடி மதிப்பீட்டில் இந்த தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் முதல் கட்டமாக 1052 சதுர அடியில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. தற்போது துவங்கியுள்ள கட்டுமான பணி இன்னும் ஓன்றரை ஆண்டில் முடியும்.
இந்த பணிகளை தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் செய்கிறது. இதை தொடர்ந்து இயந்திரங்கள் அமைக்கும் பணி தொடங்கும். இந்த பணி அடுத்த 8 மாதங்களில் முடியும். பின்னர் மேற்கொள்ளப்படும் சோதனையை தொடர்ந்து தொழிற்சாலையில் சால்வென்ட் உற்பத்தி செய்யப்படும் என்றார் அவர்.
ஏற்கெனவே கூடங்குளம் பகுதியில் அணு உலை அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த புதிய தொழிற்சாலை வேறு மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.