சென்னை: 3 நாட்களில் 4 குழந்தைத் திருமணம்... அதிகாரிகளின் அதிரடியால் நிறுத்தம்
சென்னையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் நான்கு குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
சென்னை: சென்னையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் நான்கு குழந்தை திருமணங்களை குழந்தைகள் நல அலுவலர்களும், காவல்துறையினரும் இணைந்து, தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் 16 வயதேயான சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மூலம் சமூக நலத்துறை அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடக்க இருந்த இடத்துக்கு, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ஷீலா தலைமையில் சென்ற அதிகாரிகள், திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர்.
அந்த பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை திருமணம் செய்து வைக்கக் கூடாது என பெற்றோர்களிடம் உத்தரவாதம் பெற்றுக்கொண்டு, சிறுமியை குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பெற்றோரை கண்காணிக்க உள்ளூர் தலைவர் ஒருவரையும் அதிகாரிகள் நியமித்துள்ளனர்.
இதேபோன்று, சனிக்கிழமையன்று கொடுங்மையூர் எம்.ஆர்.நகரில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்ற அதிகாரிகள் குழு, சிறுமியை மீட்டு, அவரது ஒப்புதலுடன் அரசு அங்கீகாரம் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வெள்ளிக்கிழமை அன்று எருக்கஞ்சேரியை சேர்ந்த 17 வயது மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்து சென்ற அதிகாரிகள், இந்த மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்தினர். பாதிக்கப்பட்ட மாணவி பாதுகாப்பு கோரியதைத் தொடர்ந்து, அவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதேபோன்று, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொலைப்பேசி வாயிலாக தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாணவியின் பெற்றோரை தொடர்புக்கொண்ட அதிகாரிகள், திங்கள்கிழமை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த மூன்று நாட்களில் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்க நினைப்பதை தவிர்க்க வேண்டும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சட்டரீதியாக குழந்தைத் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னரும், படிப்பறிவில்லாத கிராமங்களில் தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தன. ஆனால், தமிழகத்தின் தலைநகரில் அதுவும் அடுத்தடுத்து குழந்தைத் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.