இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்கள்: வனத்துறையினர் தீவிர ஆய்வு
தூத்துக்குடி : புன்னைக்காயல் கடற்கரையில் டால்பின்கள் இறந்து ஒதுங்கிய இடத்தில் வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கடல் பகுதியில் தாமிரபரணி ஆறு கலக்கிறது. அங்குள்ள தூண்டில் வளைவு பாலம் அருகே கடற்கரை பகுதியில் திடீரென டால்பின்கள் கரை ஒதுக்கின.
இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் அவற்றை பத்திரமாக மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இதில் நான்கு டால்பின்கள் மட்டும் இறந்த நிலையில் கரையில் மீண்டும் ஒதுங்கின. இதுகுறித்து அனைத்து துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட பயிற்சி கலெக்டர் சரவணன், வனத்துறை அலுவலர் சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் சம்பத் கூறுகையில், டால்பின்கள் கரை ஒதுங்கியதற்கான தனிப்பட்ட காரணத்தை கூற இயலாது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வகை டால்பின்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழமான பகுதியில் வாழ கூடியவை. டால்பின்கள் கரை ஒதுங்குவது தற்செயலாக நடக்கக் கூடிய நிகழ்வுதான். இந்த பகுதியை மேலும் 10 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே நெல்லை கால்நடை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் ஸ்ரீதர், சுகுமார் தலையிலான மருத்துவர்கள் இறந்த டால்பின்களை பிரேத பரிசோதனை நடத்தினர். பின்னர் ஜேசிபி மூலம் இறந்த டால்பின்கள் பாதுகாப்பாக புதைக்கப்பட்டன.