நெய்வேலி: வேன் கவிழ்ந்து 4 பேர் பலி 25 பேர் காயம்- 105 ஆண்டில் 810 பேரின் உயிர்குடித்த மரண பாலம்
கடலூர்: வடலூர் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து டிரைவர் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 5 பெண்கள் உள்பட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை, மயிலாப்பூர், விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணதாசன். பி.எஸ்.என்.எல். ஊழியர். இவர் தனது மகன் சந்திரஹாசனுக்கு(17) வேளாங்கண்ணியில் வைத்து காது குத்துவிழா நடத்துவதாக வேண்டி இருந்தார்.
அதன்படி தனது வேண்டுதலை நிறைவேற்ற கண்ணதாசன் அவரது மகன் சந்திரஹாசன், மனைவி லில்லி(42) மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் சனிக்கிழமை இரவு சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு வேனில் புறப்பட்டார். வேனில் 7 பெண்கள் உள்பட மொத்தம் 25 பேர் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பாண்டுமங்களம், சிவன்கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ்(25) என்பவர் வேனை ஓட்டிச்சென்றார். அந்த வேன் ஞாயிறு அதிகாலை 5 மணியளவில் வடலூர் அருகே கண்ணுத்தோப்பு பாலம அருகே வந்தது.
அப்போது எதிரே வந்த அரசு பஸ்சுக்கு வழிவிடுவதற்காக வேனை டிரைவர் ஓரமாக நிறுத்தினார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி வேன்மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய வேன் பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
4 பேர் பலி
இதில் வேன் டிரைவர் யுவராஜ், திருவண்ணாமலை வெண்பாக்கம், பணமுகையை சேர்ந்த நாகப்பன் மனைவி அஞ்சலை(56) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிலர் வலி தாங்க முடியாமல் வேனுக்குள் இருந்தபடியே அபயகுரல் எழுப்பினார்கள்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் ஓடோடி வந்து வேனுக்குள் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் ஆற்காடு பாப்பேரியை சேர்ந்த லலிதா(60) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
வழியில் மரணம்
பலத்த காயமடைந்தவர்கள் சிலர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் அங்கிருந்து சிலரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த அன்பு என்பவரின் மகன் ரெங்கன்(17) என்பவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
25 பேர் படுகாயம்
கண்ணதாசனின் மனைவி லில்லி, மகன் சந்திரஹாசன், சென்னை கோடம்பாக்கம் சுப்பையர் தோட்டத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ்(40), அவரது மனைவி ஸ்டைலோ(32), சென்னை, மைலாப்பூர், விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த ரஜினி மகன் ஜெகதீஷ்(10), முனுசாமி மகன் பெருமாள்(35), வேலாயுதம் மகன் ஹேம்நாத்(20), கபாலி மகன் வெங்கடேசன்(34), பெருமாள் மனைவி உஷா(43), சிவாஜி மகன் அசோக்குமார்(21), தட்சிணாமூர்த்தி மகன் ஜெகன்(20), சங்கர் மகன் சரத்(19), டென்னிஸ் மகன் பிரேம்(20), தாமஸ் மகன் சரத்(18), தேனாம்பேட்டையை சேர்ந்த பாபு மனைவி உமா(32), புதுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து மகன் கவிபாரதி(14).
விபத்து குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து வேன்மீது மோதிய லாரி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
புதுமாப்பிள்ளை பலி
வேன் கவிழ்ந்து விபத்தில் பலியான டிரைவர் யுவராஜ் புதுமாப்பிள்ளை ஆவார்.அவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது மனைவி வளர்மதிக்கு, கணவர் இறந்த செய்தி அறிந்ததும், தனது குடும்பத்தினருடன் விரைந்து வந்து கதறி அழுதார்..
ஆட்களை கொல்லும் மரணபாலம்
விபத்து நடந்த கண்ணுத்தோப்பு பாலம் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ளது. மிகவும் குறுகலான இந்த பாலத்தின் பக்கவாட்டில் சுவர்கள் எதுவும் கிடையாது. ஒரே நேரத்தில் 2 கனரக வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்ல முடியாது. இதனால் இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நிகழும்.
105 ஆண்டுகளில் 2701 விபத்துகள்
மோசமான இந்த பாலத்தில் இருட்டில் வேகமாக
இந்த பக்கம் வந்து சுதாரிக்க முடியாமல் நிலைதடுமாறி வாகனம் விபத்துக்குள்ளாகி இறந்தவர்கள் இதுவரை ஏராளமானோர்.விசாரித்ததில் கிடைத்த தகவல்படி, 1909ல் கட்டப்பட்ட இந்த ஒருவழிபாலத்தில் இதுவரை 2701 விபத்துக்கள் நடந்துள்ளன.
810 மரணங்கள்
அதைவிட அதிர்ச்சியான விஷயம். நேற்று இரவு நடந்த வேன் விபத்தில் 4பேர் பலியானது வரை மொத்தம் இதுவரை 810 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் உள்ளன.
கடந்த 105 ஆண்டுகளை கடந்த இந்த பாலத்தில் விபத்து ஏற்ப்பட்டு பலியானோர் எண்ணிக்கை வரும் காலங்களில் ஆயிரத்தை தொடும் முன் அரசும்,அதிகாரிகளும்,மக்கள் பிரதிநிதிகளும் விழித்துக்கொண்டு உடனடியாக புதிய பாலம் அந்த பகுதியில் கட்டவும்,இதுவரை விபத்துக்களை அள்ளிகொடுத்த பாலத்தில் முதல் கட்டமாக தடுப்பு சுவர்களை அமைக்கவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எப்போது விடிவுகாலம்
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும்போது சாலை இருக்கும் அகலத்துக்கு ஏற்ப பாலம் இல்லை. சாலையில் பாதி அளவுதான் பாலம் இருக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து நடக்கும். பாலத்தை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது பாலத்தில் வேன் கவிழ்ந்து 4 உயிர்கள் பலியாகிவிட்டன. இனிமேலாவது இந்த பாலத்துக்கு ஒரு விடிவுகலாம் பிறக்கிறதான்னு பார்ப்போம் என்று மன வேதனையோடு கூறினார்.