8 வழிச்சாலை.. விவசாயிகள் கூட்டம் நடத்த முடிவு: மேலும் 4 பேரை கைது செய்தது போலீஸ்
விவசாயிகள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
சேலம்: 8 வழிச்சாலை தொடர்பாக விவசாயிகள் கூட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து, மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளது விவசாயிகளிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உறுதியாக தெரிவித்துவிட்டது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. விவசாயத்தை அழித்துவிட்டு பசுமை சாலை வேண்டாம் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.
நில அளவீடு செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் விவசாயிகள் கொதிப்படைந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக 8 கி.மீ. தொலைவுக்கு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சவாடி கணவாயில் இருந்து குப்பனூர் வரை எல்லை நிர்ணயிக்கும் பணி முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சேலம் வெள்ளியம்பட்டியில் நிலஅளவீடு பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏராளமான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நில அளவீடு முருகன் என்ற விவசாயியின் 4 ஏக்கர் நிலத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான கல் நடும் பணியையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இதனிடையே தங்களது எதிர்ப்புகளை மீறியும் அதிகாரிகள் நிலஅளவீடு செய்து வருவதை கண்டித்து விவசாயிகள் 8 வழிச்சாலை தொடர்பாக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வந்த தகவல் காரணமாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 பேரை கைது செய்துள்ளது விவசாயிகளிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.