சாலையில் சண்டை.. பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள்.. மின்னல் வேகத்தில் மோதிய ஆம்னி.. 4 பேர் பலி!
Recommended Video
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த தொழிலதிபர் ஐசக் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில் தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் அரக்கோணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த இறைஞ்சி என்ற கிராமம் அருகே வந்தபோது, பின்னால் அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் செல்போன் பேசியபடி கவனக்குறைவாக பேருந்தை ஓட்டி வந்ததால், எதிர்பாராதவிதமாக காரின் பின்பகுதியில் பேருந்து பயங்கரமாக மோதியது.
இதையடுத்து ஐசக் காரை நிறுத்திவிட்டு அரசுப் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். விபத்துக்குள்ளான காரும், அரசுப் பேருந்தும் சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால், அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தனர்.
இதனிடையே அந்த நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் சொகுசு பேருந்து, அரசு பேருந்திலிருந்து இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதி, பின்னர் அரசு பேருந்தின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த, காரில் வந்த தொழிலதிபர் ஐசக் மற்றும் பேருந்தில் பயணம் செய்த அறந்தாங்கியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சற்குணம் ஆகிய மூன்று பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள், தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என சுமார் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் விபத்தில் உயிரழந்த நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே இருந்ததால், சென்னை - திருச்சி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்து பற்றி உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.