செங்கோட்டையனுக்கு திடீர் முக்கியத்துவம்- எடப்பாடி பழனிச்சாமி உட்பட 4 அமைச்சர்கள் கடும் அதிருப்தி?
சென்னை: அதிமுகவில் செங்கோட்டையனுக்கு திடீர் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தங்களை சமாதானப்படுத்த முயற்சித்த செங்கோட்டையனை செல்லூர் ராஜூ, வீரமணி, தங்கமணி ஆகிய அமைச்சர்களும் கடுமையாக ஒருமையில் வசைபாடியுள்ளனர்.
பெண் விவகாரங்களில் சிக்கிய செங்கோட்டையனை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கைப்பற்றிய சசிகலா, செங்கோட்டையனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் சசிகலா அணியில் இருந்த மதுசூதனன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். இதையடுத்து மதுசூதனன் வகித்து வந்த அதிமுக அவைத் தலைவர் பதவியை செங்கோட்டையனுக்கு கொடுத்தார் சசிகலா.
அதிருப்தியில் எடப்பாடி
இதை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் அமைச்சர் பொன்னையன் நேற்றே முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு தாவிவிட்டார். அதேபோல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக மன்னார்குடி கோஷ்டியால் முன்னிறுத்தப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம்.
முதல்வர் பதவி
அதுவும் முதல்வர் பதவிக்கு செங்கோட்டையன் அல்லது தம்பிதுரையை முன்னிறுத்தவும் சசிகலா முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த செய்தி வெளியான போது எடப்பாடி பழனிச்சாமி உச்சகட்ட கோபமடைந்தாராம்.
அமைச்சர்கள் ஆத்திரம்
இதனிடையே கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வீரமணி, தங்கமணி ஆகியோரிடம் செங்கோட்டையன் அதிகார தோரணையில் சசிகலாவைத்தான் ஆதரிக்க வேண்டும் என வாதிட்டிருக்கிறார். இதில் கடும் கோபமடைந்த அமைச்சர்கள் செங்கோட்டையனை ஒருமையில் கடுமையாக வசைபாடியுள்ளனராம்.
வன்னியர்கள் அதிருப்தி
மேலும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு இப்படி சசிகலா தரப்பு முக்கியத்துவம் கொடுத்து வருவது வன்னியர் சமூக அதிமுக அமைச்சர்கள், தலைவர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளதாம். எந்த பக்கம் திரும்பினாலும் மன்னார்குடி கோஷ்டிக்கு கடும் எதிர்ப்பு என்பது சசிகலாவை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறதாம்.