சவுதியில் அடி உதைக்கு ஆளாகும் 4 தமிழர்கள்: காப்பாற்றக்கோரும் உறவினர்கள்
சென்னை: நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த 4 பேர் சவுதி அரேபியாவில் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி அவர்களது உறவினர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர்.
சவுதி அரேபியாவிற்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அவ்வப்போது தங்களின் குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றனர். இதில் சித்ரவதைக்கு ஆளாகும் பலரும் உதவி கேட்டு வீடியோக்களை அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கலைவாணன், ராமன், ஏபினேசர் லூகாஸ், தாமஸ்ராஜ் ஆகிய 4பேரும் தாங்கள் அடித்து துன்புறுத்தப்படும் காட்சியை செல்ஃபோனில் படம் பிடித்து அதை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
ஒட்டுநர் வேலைக்காக சவுதி வந்த தங்களுக்கு கால்நடைகள் மேய்கும் வேலை தரப்பட்டதாகவும் அதைச்செய்ய மறுத்ததால் அடித்து உதைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் உறவினர்கள், சவுதியில் சித்ரவதைக்கு ஆளாகி வரும் நால்வரையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர்.