விடைத்தாள்கள் திருட்டு.. 8 அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சஸ்பெண்ட்; 25 பேர் இடமாற்றம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விடைத்தாள் மாயமான விவகாரம் தொடர்பாக ஊழியர்கள் எட்டு பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 24 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை ஸ்டிராங் ரூமில் வைத்திருந்த டம்மி எண் கொடுக்கப்பட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது 550 மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போனது.விசாரணையில் டூப்ளிகேட் சாவி மூலம் ஸ்டிராங் ரூமை திறந்து, கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்து அலுவலக உதவியாளர்களே விடைத் தாள்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
அலுவலக உதவியாளர்கள் சபாநாயகர் தெருவில் நடத்தி வந்த லாட்ஜில் சோதனை நடத்தி விடைத்தாள்களை பறிமுதல் செய்தனர்.விடைத்தாள் திருட்டில் ஈடுபட்டதாக பிரபாகரன், பிரசன்னா, மாரிமுத்து, ஜெயராஜ் உட்பட எட்டு அலுவலக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தேர்வு கட்டுப்பாட்டுத் துறையில் இருந்த அலுவலக உதவியாளர்கள் 25 பேர் கொச்சி, பெங்களூரு, சேலம், ஓசூர், நெல்லை, நாகர்கோவில் என அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விடைத்தாள் திருட்டு குறித்து போலீசில் புகார் கொடுக்க நிர்வாக அதிகாரி சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.