கீழடியில் 4-ம் கட்ட ஆய்வை தமிழக அரசு நடத்தும்: மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் 4-ம் கட்ட ஆய்வை தமிழக அரசே தொடர்ந்து நடத்தும் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃ.பா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை: சிவகங்கை அருகே கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக அரசே நடத்தும் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 3 கட்ட அகழாய்வுகளில் பழந் தமிழரின் பெருமை மிகு தனிச் சிறப்புமிக்க நாகரிகம் கண்டறியப்பட்டது. தற்போது இந்த அகழாய்வுப் பணிகளை திடீரென கைவிடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் சென்னையில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கீழடியில் 4-வது கட்ட அகழாய்வு சோதனை முயற்சியாக இல்லாமல் முழு அளவில் நடத்தப்படும். இந்த அகழாய்வுப் பணிகளை தமிழக அரசே மேற்கொள்ளும்.
அகாழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்திருக்கிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் காட்சிப்படுத்தப்படும். இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் கூறினார்.